Sunday, June 25, 2006

படிக்கலாமா...

ரொம்ப நாட்களாக ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்றால் படிக்கவும் வேண்டும் அல்லவா... ?
படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏராளம் என்னிடம் உள்ளன. அவையெல்லாம் கடமைக்காக. அப்பாவின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து பணம் கட்டிய பட்ட மேற்ப்படிப்புக்காக, வந்த புத்தகங்கள். சில புத்தகங்களை இன்னமும் திறக்கக் கூட இல்லை.
கல்லூரி காலத்தே, கவிஞனாகவும், கலையார்வம் நிரம்பியும் கலகலவென நண்பர்கள் சூழவும் இருந்து களித்த நினைவு வந்தது. அவ்வப்போது எழுதி வந்த கவிதைகளை, ப்ரசுரிக்க எந்த பத்திரிக்கையும் விரும்பாது என்ற நம்பிக்கையால் , எப்போதும் பத்திரிக்கைக்கு எதையும் அனுப்பி வைத்தது இல்லை... சந்தா உட்பட !!..
அவ்வப்போது நூலகங்களில் படிப்பதோடு சரி..படிக்க சில இடங்கள் சில நேரங்களில் செளகரியமானவை. பொழுது போக்க வேண்டி நூலகம் சென்று , வருகிற அத்தனை பத்திரிக்கையையும் படித்துமுடித்து விட்டு பின்பு மீண்டும் நேரம் மிச்சமிருக்க அருகிலிருக்கிற தேனீர் கடையில் சுடசுட எண்ணை வாசமடிக்கும் பஜ்ஜியை உப்பும் உரைப்பும் சற்று தூக்கலாக இருக்கும் தேங்காய் (வெள்ளையாய் இருப்பதனால் !!) சட்னியில் நனைத்து கடித்து சுவைத்து, “விபச்சார அழகிகள் கைது” , “நூதன முறையில் திருட்டு”, என்பன போன்ற செய்திகளையும், சிந்துபாத் படக்கதையையும் படித்து விட்டு அருகிலிருக்கின்ற புத்தகக் கடையில் தொங்கும் புதிய புத்தகஙளின் வண்ண வண்ண அட்டைகளைப் பார்த்து, பெரிய எழுத்துக்களுடன் தொங்கும் செய்தித் தாளின் சுருக்கத்தினையும் படிக்கும் நேரத்தில், வீடு செல்ல வேன்டிய பேருந்து வந்து, அதில் ஏறி அமர்ந்தால், நடத்துனர் கொடுத்த பயணச் சீட்டினில் அச்சிடப்பட்டிருக்கின்ற எழுத்துக்களைப் படித்து முடித்தால் அருகில் வந்து அமரும் கிராமத்தில் அரசியல் பேச ஞானம் பெற, வெளி வருகிற அரசியல் பத்திரிக்கைகளில் பாதியை அள்ளி வந்திருக்கின்ற அன்பரிடமிருந்து இரு புத்தகங்களை இரவல் வாங்கி படித்து முடிக்க, இறங்க வேன்டிய இடம் வர நன்றி சொல்லி, பல உலக விஷயங்களைப் படித்து முடித்த மன நிறைவுடன் வீடு வந்து சேரும் பொழுது.....
புத்தக அலமாரியில் இருக்கின்ற படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள் ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கும்...
நமக்கு நேரம் இருந்தால் தானே !!! மாலை செய்தி படிக்க நேரமாகி விட்டிருக்கும்...

Thursday, June 15, 2006

இரு கோடுகள்

இது பாலசந்தர் படம் அல்ல,...நடைமுறைத் தத்துவம்..

இப்போதய மத்திய அரசில், அக்பர் அவையில் இருந்த பீர்பால் போன்ற மதி நுட்பம் மிகுந்த,
மந்திரிகள் இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசு ஒரு புறம் அறிவித்துக் கொண்டு இருக்கிறது.. மறு புறம், இடதுசாரி கட்சிகள் தத்தமது மாநிலங்களிலும், டெல்லியிலும் விலை உயர்வை கண்டித்து, போராட்டம் நடத்துகின்றன. காங்கிரஸ் ஆளும், மாநிலங்களிலோ, விற்பனை வரியை கட்டுப்படுத்தி, ஒரு ரூபாய் வரை பெட்ரோல் பொருட்கள் விலை குறைக்கப் பட்டுள்ளது..

கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பத்து தினங்களுக்கு முன்பு வரை, பரபரப்பாக பேசப்பட்ட, போராடப்பட்ட, இட ஒதுகீட்டுப் பிரச்சனை, இப்போது, எல்லோராலும், மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ,விஷயம் ஆகி விட்டது..

இப்போது பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனயை சமாளிக்க, இன்னொரு பெரிய கோடு போடத் தெரியாதா என்ன, நம் ஆட்சியாளர்களுக்கு ?

வாழ்க ஜனனாயகம் !!